Saturday, October 16, 2010

சுன்னத் (நபி வழி) என்பதின் விளக்கம் என்ன?


இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையாகிய சுன்னாவும் ஆகும். மார்க்கம் என்ற அடிப்படையில் நாம் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும் அதற்கு நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இருக்கவேண்டும். ஆனால், மிக வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், மக்கள் சுன்னத் என்றால் என்ன என்ற விஷயத்தை சரியாக விளங்கவில்லை. இதன் காரணமாக, நபி(ஸல்) அவர்கள் காட்டாத வழிமுறைகளும் மக்களுடைய பழக்கவழக்கங்களும் (ஆதத்) சுன்னத்தாக மக்கள் மத்தியில் ஏற்கப்பட்டு அதிலேயே உறுதியாக செயல்படக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது.

பொதுவாக, நபி(ஸல்) அவர்கள் அன்றைய கால மக்களின் நடைமுறையில் உள்ள சில விஷயங்களை, பழக்கவழக்கங்களை அவர்களும் செய்து வந்துள்ளார்கள். உதாரணத்திற்கு, தாடி வளர்ப்பது, ஒட்டகத்தில் பயணம் செய்வது, கோதுமை ரொட்டி சாப்பிடுவது, பேரித்தம் பழத்தை உணவாக உட்கொள்வது போன்ற செயல்கள், அனைத்து மக்களும் அதாவது காபிர்களும் முஸ்லிம்களும் செய்து வந்தனர். நபியவர்களும் இவ்வாறு செய்துள்ளார்கள். நபியவர்களும் இதை பின்பற்றியதால் நாம் இவை அனைத்தையுமே சுன்னத் என்று கருதுவதில்லை.

தாடி வைப்பதை சுன்னத் என்று கூறுவோம். அதனை நாமும் நிறைவேற்றுவோம். ஏனெனில், தாடி வைப்பது அன்றைய கால மக்களின் நடைமுறையாக இருந்தாலும் நபியவர்கள் அதனை தீனுடைய அம்சமாக வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். பேரித்தம் பழத்தை நபியவர்கள் உணவாக உட்கொண்டிருந்தாலும் நாம் அதை உண்பதை சுன்னத் என்று கூறுவதுமில்லை. ஆனால், நோன்பு துறக்கும்போது பேரித்தம் பழத்தைக் கொண்டு நோன்பு துறப்பதை நாம் சுன்னத் என்று கூறுவோம். ஏனெனில், நபியவர்களும் அதனைச் சிறப்பித்து வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

இவ்வாறே நபியவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்திருந்தாலும் குடிசையில் வாழ்ந்திருந்தாலும் நாம் அவ்வாறு பயணம் செய்வதையும் குடிசையில் வாழ்வதை சுன்னத் என்று கூறுவதில்லை.

கோதுமை ரொட்டி சாப்பிடுவதையும் இன்னும் நபியவர்கள் அக்கால நடைமுறைப் பழக்கவழக்கங்களாக எவைகளையெல்லாம் செய்தார்களோ, அவை அனைத்தையுமே ஒருவன் சுன்னத் என்று கருதுவானேயானால், அவன் மார்க்க அறிவு சிறிதும் இல்லாதவன் என்றே பொருள். ஏனென்றால், நபியவர்களிடம் அழகிய முன்மாதிரி இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். எனவே, நாம் நம்முடைய மாhக்கக் காரியங்கள் அனைத்திலும் நபியவர்களைத்தான் பின்பற்றவேண்டும். எனவே, நபியவர்கள் அன்றைய கால நடைமுறையில் உள்ள செயல்களை செய்திருந்தால் அவை அனைத்துமே சுன்னத் என்று கூறுவது நபியவர்களின் வாழ்க்கையை பின்பற்ற முடியாத வாழ்க்கையாக மாற்றிவிடும்.

ஒட்டகத்தில் பயணம் செய்வதும் ஒரே ஆடையை உடையாக அணிவதும் இன்றைய கால கட்டத்தில் அதிகமான மக்களால் செயல்படுத்த முடியாது. எனவே, நபியவர்களின் பல சுன்னத்துகளை நிறைவேற்ற முடியாது என்ற நிலை ஏற்படும். எனவே, நபியவர்கள் பின்பற்ற முடியாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டியுள்ளார்கள், அவர்களுடைய வழிகாட்டுதல் எக்ககாலத்திற்கும் பொருந்தக் கூடியது அல்ல என்று கூறக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும்.

நபி(ஸல்) அவர்கள் ஏனைய மக்களைப் போன்று ““ஆதத்”தில் உள்ள பழக்கவழக்கங்களைச் செய்திருந்தால் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்திக் கூறவில்லையென்றால், அது அவர்களுடைய நடைமுறைதானே தவிர மார்க்கம் ஆகாது. இத்தகைய பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு ஊருக்கும் நாட்டிற்கும் மத்தியில் வேறுபட்டுக் காணப்படும்.

சுன்னத்துகளில் சில அன்றைய கால மக்களுடைய ஆதத் - நடைமுறையில் உள்ளவையாக இருக்கலாம். ஆனால், மக்களுடைய நடைமுறையில் உள்ள அனைத்தும் சுன்னத்தாக முடியாது. அது சுன்னத்தாகக் கருதப்படவேணடுமென்றால், நபியவர்கள் அதனை மார்க்கக் கடமை எனும் அளவிற்கு வகைப்படுத்திக் காட்டியிருக்கவேண்டும்.

இவ்வாறே, நபியவர்கள் கூறியவைகள் அனைத்தும் மார்க்கக் கடமைகள் என்று கருதுவதும் தவறானதாகும். பின்வரும் செய்தியின் மூலம் இதனை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

நபியவர்கள் (மதீனாவிற்கு வந்த புதிதில்) பேரித்தம் மரங்களுக்கு மகரந்தச் சேர்க்கை செய்து கொண்டிருந்தவர்களை கடந்து சென்றார்கள். அப்போது நீங்கள் இதனைச் செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினார்கள். மற்றொரு வருடம் அவர்களைக் கடந்து சென்றபோது உங்களுடைய பேரித்தம் மரங்களுக்கு என்ன? (விளைச்சல் சரியாக இல்லையே!)”என்று வினவினார்கள். மக்கள் “நீங்கள்தான் இப்படி, இப்படியெல்லாம் கூறினீர்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் “உங்களுடைய உலக விவகாரங்களைப் பற்றி நீங்கள்தான் மிகவும் அறிந்தவர்கள் ” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ்(ரலி)

நூல் : முஸ்லிம்
(4358)

முஸ்லிமின்
4357 வது அறிவிப்பில் “நான் மார்க்கம் தொடர்பான ஏதாவது விசயத்தை கட்டளையிட்டால் அதை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்” என்றும் இடம் பெற்றுள்ளது.

பேரித்தம் மரங்களில் ஆண் பூவையும் பெண் பூவையும் மகரந்தச் சேர்க்கை செய்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். ஆனால், இதைப் பற்றி நபியவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே, இதனை செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகிறார்கள். எனவே, மக்களும் நபியவர்கள் கூறினால் இறைவனுடைய கட்டளையாயிற்றே என்று எண்ணி அவ்வருடம் அதனை விட்டுவிட்டதால் விளைச்சல் குறைந்து விட்டது. அப்போதுதான், நபியவர்கள் மார்க்க விஷயங்களில் நான் கூறுபவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள். இவ்வுலக விஷயங்களைப் பற்றி நான் கூறுபவற்றை ஏற்றாக வேண்டும் என்று அவசியம் இல்லை என்ற கருத்தை மக்களுக்கு விளக்குகிறார்கள். எனவே, நபியவர்கள் மார்க்கம் என்ற அடிப்படையில் ஒன்றைக் கூறினால்தான் அது சுன்னத்தாக் கருதப்படும். அவர்களாக தம் சுயவிருப்பப்படி ஒன்றைக் கூறினால், அது மார்க்கம் ஆகாது. இதனை அனைத்து ஸஹாபாக்களும் விளங்கி வைத்திருந்தார்கள். இதனை பின்வரும் செய்தியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பரீரா(ரலி) அவர்களின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முகீஸ் என்று பெயர் சொல்லப்படும். அவர், (பரீரா தம்மைப் பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்தபோது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களிடம், “அப்பாஸ் அவர்களே! முகீஸ், பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?” என்று கேட்டார்கள். (முகீஸிடமிருந்து பரீரா பிரிந்து விட்டபோது) நபி(ஸல்) அவர்கள், “ முகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?” என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா, அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,(இல்லை) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன”என்றார்கள். அப்போது பரீரா, (அப்படியானால்), அவர் எனக்குத் தேவையில்லை” எனக் கூறிவிட்டார்.

அறிவிப்பவர் : பின் அப்பாஸ்(ரலி)

நூல் : புகாரீ
(5283)

ஏனைய மக்கள் நடைமுறையில் அறிவுரை கூறுவதுபோல அவர்கள் கூறினால், அது மார்க்கம் என்று கருதப்படாது. அதனை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் அவரவருடைய விருப்பத்தைப் பொருத்ததாகும். எனவேதான், நபியவர்கள் தாமாக ஒரு கருத்தைக் கூறியபோது பரீரா(ரலி) அவர்கள் அதனை ஏற்க மறுக்கிறார்கள். நபியவர்களும் அதனை ஆட்சேபிக்கவில்லை.

மேற்கண்ட விளக்கங்களிலிருந்து நாம் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். அதாவது, சுன்னத் என்பது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் அமைந்த நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவைகளாகும். அன்றைய கால மக்களுடைய நடைமுறையில் உள்ள காரியங்களை நபி(ஸல்) அவர்கள் செய்திருந்தாலோ, அல்லது மார்க்கம் அல்லாது நடைமுறையில் நாம் கூறுவதைப் போன்று நபியவர்கள் கூறியிருந்தாலோ, அது சுன்னத் எனும் அளவிற்கு வலியுறித்திக் கூறவில்லையென்றால், அது சுன்னத்தாக ஆகாது. அதனைப் பின்பற்றுவது அவசியமும் அல்ல.

நபியவர்களின் வழிகாட்டுதலையே நாம் இரண்டாகப் பிரிக்கும் போது ஸஹாபாக்களை பின்பற்றுதல் என்பது இறைவன் அனுமதிக்காத ஒரு அடிப்படையாகும். குர்ஆன், ஹதீஸ் மட்டும் தான் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்பதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.

அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட இந்த இஸ்லாமிய மார்க்கத்தை அல்லாஹ், தன் வேதமான திருக்குர்ஆன் மூலமும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்கள் மூலமும் காட்டித்தந்துள்ளான்.


இந்த இரண்டும்தான் இஸ்லாத்தின் அடிப்படையாகும். இந்த இரண்டை மட்டும்தான் முஸ்­லிம்கள் பின்பற்றவேண்டும். இவ்வாறு அல்லாஹ் திருக்குர்ஆனில் ஏராளமான வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِنْ كُنتُمْ مُؤْمِنِينَ(1) سورة الأنفال

நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!

(அல்குர்ஆன்
8:1)

وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ(13) سورة النساء

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
(அல்குர்ஆன்
4:13)

وَمَنْ يُطِعْ اللَّهَ وَالرَّسُولَ فَأُوْلَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنْ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُوْلَئِكَ رَفِيقًا(69) سورة النساء

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.
(அல்குர்ஆன்
4:69)

وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا(71) سورة الأحزاب

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.
(அல்குர்ஆன்
33:71)

இஸ்லாத்தின் அடிப்படையாக உள்ள, இறைவனின் வாக்கான திருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றாதவனை திருக்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கிறது.

وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ(14) سورة النساء

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன்
4:14)

وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا(23) سورة الجن

அல்லாஹ்விடமிருந்தும், அவன் தூதுச் செய்திகளி­ருந்தும் எடுத்துச் சொல்வதைத் தவிர (வேறு இல்லை). அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்வோருக்கு நரக நெருப்பு உள்ளது. அதில் என்றென்றும் அவர் நிரந்தரமாக இருப்பார்.

(அல்குர்ஆன்
72:23)

وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَالَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا(27) سورة الفرقان

அநீதி இழைத்தவன் தனது கைகளைக் கடிக்கும் நாளில் ''இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே'' என்று கூறுவான்.

(அல்குர்ஆன்
25:27)

இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனையும் நபிவழியையும் விட்டுவிட்டு முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ அல்லது பெரும்பான்மை மக்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்பதற்காகவோ அவற்றை பின்பற்றுபவனுக்கு பின் வரும் திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவான அறிவுரையை கூறுகிறது.

وَإِذَا قِيـلَ لَهُـمْ اتَّبِعـُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ(170) سورة البقرة

''அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் ''எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று (மக்கா காஃபிர்கள்) கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?

(அல்குர்ஆன்
2:170)

وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ(104) سورة المائدة

''அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் ''எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?

(அல்குர்ஆன்
5:104)

وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ(28) سورة الأعراف

அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது ''எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்'' என்று கூறுகின்றனர். ''அல்லாஹ் வெட்கக் கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!

(அல்குர்ஆன்
7:28)

يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَالَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَ(66)وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَ(67)رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنْ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا(68) سورة الأحزاب

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ''நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள். ''எங்கள் இறைவா! எங்கள் தலை வர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள். ''எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!'' எனவும் கூறுவார்கள்.

(அல்குர்ஆன்
33:66...68)

இதைப் போன்று பெரும்பான்மை கூட்டம் சொல்வதால் ஒரு கருத்து உண்மையானதாக சத்தியமானதாக ஆகிவிடாது என்பதையும் திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ(187) سورة الأعراف

எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

(அல்குர்ஆன்
7:187)

وَلَكِنَّ أَكْثَرَهُمْ يَجْهَلُونَ(111) سورة الأنعام

எனினும் அவர்களில் அதிகமானோர் அறியாதவர்கள்.

(அல்குர்ஆன்
6:111)

وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ(106) سورة يوسف

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.
(அல்குர்ஆன்
12:106)

بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ الْحَقَّ فَهُمْ مُعْرِضُونَ(24) سورة الأنبياء

எனினும் அவர்களில் பெரும்பாலோர் உண்மையை அறிய மாட்டார்கள். அவர்கள் புறக்கணிப்பவர்கள்.
(அல்குர்ஆன்
21:24)

يُلْقُونَ السَّمْعَ وَأَكْثَرُهُمْ كَاذِبُونَ(223) سورة الشعراء

அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர். அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள்.

(அல்குர்ஆன்
26 : 223)

وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ(116) سورة الأنعام

பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையி­ருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.

(அல்குர்ஆன்
6 : 116)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் சமுதாயத்தில் ஒரு குழுவினர் (உண்மை கொள்கைக்கு) ஆதரவாளர்களாக இருந்து கொண்டே இருப்பார்கள். இறுதியாக அவர்கள் மேலோங்கியவர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களிடம் இறைக்கட்டளை(யான மறுமைநாள்) வரும்.

அறிவிப்பவர் : முஃகீரா (ர­லி)

நூல் : புகாரீ
(7311)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஸ்லாமிய மார்க்கம் புதுமையானதாக (ஆரம்பத்தில், மக்கள் மனதில்) தோன்றியது. முன்னால் தோன்றியது போலவே புதுமையானதாக (பிற்காலத்திலும்) தோன்றும். (அந்த) புதுமைவாதிகளுக்கு நாற்செய்தி உண்டாகட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி)

நூல் : முஸ்­லிம்
(208)

முன்னோர்கள் சொன்னதற்கும் செய்ததற்கும் மாற்றமாக இருக்கிறது, முரணாக இருக்கிறது என்பதற்காகவோ புதிய கருத்தாக இருக்கிறது என்பதற்காவோ ஒரு கருத்தை மறுக்கக் கூடாது. எந்த கருத்தாக இருந்தாலும் அது திருக்குர்ஆன் நபிமொழிக்கு ஒத்ததாக இருக்கிறதா? அல்லது முரணாக இருக்கிறதா? என்பதை பார்த்து, திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் ஒத்து இருக்கும் கருத்தை ஏற்று, முரணாக இருக்கும் கருத்தை புறக்கணிக்க வேண்டும்.

நமக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்படும்போது திருக்குர்ஆனையும் நபிமொழியையும் வைத்தே எக்கருத்து சரியானது என்பதை முடிவு செய்யவேண்டும். இவ்வாறே திருக்குர்ஆன் வழிகாட்டுகிறது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُوْلِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا(59) سورة النساء

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

(அல்குர்ஆன்
4:59)

فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا(65) سورة النساء

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தியும் கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

(அல்குர்ஆன்
4:65)

إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُوْلَئِكَ هُمْ الْمُفْلِحُونَ(51) سورة النور

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ''செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்
24:51)

அல்லாஹ் காட்டிய இந்த அற்புதமான வழிமுறைகளை விட்டு விட்டு யார் சொன்னாலும் அதை மார்க்கமாக எடுத்து செயல்பட்டால் அதற்கு கூலி­ கிடைக்காததோடு தண்டனையும் கிடைக்கும்.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا ... (3) سورة المائدة

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

(அல்குர்ஆன்
5:3)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான ( தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.

அறிவிப்பவர் : இர்பாள் பின் ஸாரியா(ர­லி)

நூல் : அஹ்மத்
(16519)

மார்க்கம் என்பது நாயகம்(ஸல்) அவர்களோடு முழுமைப்படுத்தப்பட்டு விட்டது. இனி இம்மார்க்கத்தில் ஒன்றைக் கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.

இவ்வாறு நாயகம்(ஸல்) அவர்கள் காட்டித் தராத வழிமுறைகளைப் பின்பற்றுவது அல்லாஹ்‎வுக்கு இம்மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பது போன்றதாகும். அதாவது, அல்லாஹ் முழுமைப்படுத்திய மார்க்கம் எங்களுக்குப் போதாது. இன்னும் பல விஷயங்கள் உள்ளன என்று கூறுவதைப் போன்றதாகும்.

அல்லாஹ் கேட்கிறான் :

قُلْ أَتُعَلِّمُونَ اللَّهَ بِدِينِكُمْ وَاللَّهُ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ(16) سورة الحجرات

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்
49:16)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே!

அறிவிப்பவர் : ஆயிஷா(ர­லி)

நூல் : புகாரீ
(2697)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.

அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி­)

நூல் : முஸ்­லிம்
(3243)

நாயகம்(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளைப் பின்பற்றாமல் தனது மனோ இச்சைப்படி பித்அத்தான காரியங்களைச் செய்பவனின் நிலை என்னவாகும் என்பதை அல்லாஹ் தன் திருமறையில் அற்புதமாக விளக்குகின்றான்.

''செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல்புரிவதாக நினைக்கின்றனர். அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம். அவர்கள் (என்னை) மறுத்த தற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கே­யாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.

(அல்குர்ஆன்
18 :103.....106)

எனவேதான், நாயகம்(ஸல்) அவர்கள் பித்அத்தான காரியங்களை விட்டும் எச்சரிக்கை செய்கிறார்கள்.

நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி­)
நூல் : நஸயீ
(1560)

இன்று நம் சமுதாயத்தில் குர்ஆனுக்கும் நபி வழிக்கும் மாற்றமான எத்தனையோ புதுமையான நடைமுறைகள் காணப்படுகின்றன அவற்றில் சிலவற்றைக் காண்போம் :

1. பாங்குக்கு முன் ஸலவாத் கூறுவது

2. ஜுமுஆவில் இரண்டு பாங்கு கூறுதல்

3. தொழுகைக்கு பின் கூட்டு துஆ ஓதுதல்

4. ஷஅபான் பிறை 15, ரஜப் பிறை 27 இரவுகளில் நின்று வணங்கி பக­ல் நோன்பு நோற்றல்

5. இறந்தவருக்கு
40 நாட்கள் தொடர்ந்து ஃபாத்திஹா ஓதுதல்

6. வருடாந்திர ஃபாத்திஹா ஓதுதல், மவ்லீது ஓதுதல், மீலாது விழா கொண்டாடுதல்

இதைப்போன்று எத்தனையோ செயல்கள் மார்க்கத்தின் பெயரால் நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவற்றிக்கும் நன்மை கிடைக்காது என்போதோடு தண்டனையும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, மத்ஹபு ரீதியாகவும் சமுதாயம் பிரிந்து கிடக்கின்றனர். ஷாஃபி, ஹனஃபி, ஹன்ப­, மா­கி என்று பல பிரிவுகளாகப் பிரிந்து மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை மார்க்கம் என்ற பெயரில் செய்கின்றனர்.

நான்கு மத்ஹபில் உள்ள எத்தனையோ சட்டங்கள் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் மாற்றமாக இருந்தாலும் குர்ஆன் சுன்னாவை தூக்கி எறிந்து விட்டு மத்ஹபுகளைப் பின்பற்றக்கூடிய அவல நிலையையும் காண்கிறோம்.

அல்குர்ஆனும் நபிவழியும் மார்க்கம் என்பதை அறியாததினால்தான் இந்நிலை காணப்படுகிறது. நாம் நம்முடைய வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் குர்ஆனையும் நபிவழியையும் மட்டுமே பின்பற்றி நடக்கவேண்டும்.
நன்றி : :.rasminmisc

No comments:

Post a Comment