Friday, October 15, 2010

அழுகிப்போன யானைகளுக்கும் கருகிப்போன கழுதைகளுக்கும்..

அல்லாஹ் பிச்சை அவ்லியாவைப்பற்றி தென் மாநிலப் பகுதிகளில் அறியதவர்கள் இருக்கமாட்டார்கள். தங்களின் கோரிக்கைகள், தேவைகள் நிறைவேறுவதற்காக குடும்பம் குடும்பமாக படையெடுத்துச் செல்வதைப்பற்றி நமது நண்பர் ஒருவர் சொன்ன செய்திகள் மிகவும் வியப்பைத்தந்தது. அந்த மகானின் கப்றை தரிசிப்பதற்காக மனைவி,மகன்,மகள் தொல்லை தாங்காது அவரும் ஒருநாள் பேருந்து ஒன்றில் குடும்ப சகிதமாக புறப்பட்டுச் சென்றார். அவரே அது பற்றிச் சொல்வதை நாமும் கேட்போம்.
சோலைக்கரைக்குச் செல்லும் பேருந்தில் நடத்துனரிடம் ‘சோலைக்கரைக்கு மூணு ஃபுல் ஒரு ஆஃப்’ என பயணச்சீட்டு கேட்டேன். எங்கே இறங்கணும் ? நடத்துனர் கேட்டதும் நான் தடுமாறினேன். இது எங்கள் முதல் புனித யாத்திரை! மீண்டும் கேட்டார். பெரிசா? சிறுசா?
கண்டக்டர் ஐயா ! பெரிசும் சிறுசும் தெரியாது. அல்லாஹ் பிச்சை தர்ஹாவிலே இறங்கணும்.
‘அது சின்ன பள்ளிவாசல்’. நடத்துனர் டிக்கட் தந்தார். ‘சின்ன பள்ளி வாசல்’ வந்தாச்சு ! நடத்துனர் சப்தம் கொடுத்தார்.
எங்களோடு வேறு சில பக்தர்களும் இறங்கினார்கள். அல்லாஹ் பிச்சை அவ்லியா அடங்கியுள்ள அந்ந பரிசுத்தமான மணலில் கால் பட்டதும் தலையில் இதுவரை துணி எதுவும் போடாது வந்த என் மனைவி சாரி முந்தானையால் பக்திப் பரவசத்தோடு தலையை மறைத்தாள். பக்கத்திலிருந்த ஒரு பெட்டிக் கடையில் வழி விசாரித்தேன்.
அல்லாஹ் பிச்சை அவுலியா தர்ஹா எந்தப்பக்கம்?
ஊதுபத்தி, சாம்பிராணி எல்லாம் வேண்டாமா ?
‘வேணும்’ எனறாள் என் மனைவி. அவள் உயரத்தில் ஒரு வாழைப்பழக் குலை நேர்ச்சை நேர்ந்திருந்தாள்.
அது நினைவுக்கு வந்ததும் அவரிடம் இந்த அம்மா உயரத்துக்கு ஒரு குலை கிடைக்குமா?
கடைக்காரன் அவனது கண்களால் எனது மனைவியின் உயரத்தை அளவெடுத்தான். இந்த உயரத்திலே கிடைக்காது அத்தா! உடனே நான் என் மனைவியிடம் ‘ நீ இந்த அவ்லியா கராமத்தைக் கொண்டு கிடைக்குமெனச் சொன்னியே!
அதற்கவள் கதீஜா பாட்டி தான் ‘யார் எதைக் கேட்டாலும், எது வேணும்ணாலும் இங்;கே கிடைக்கும்ணு சொன்னாங்க!
கிடைக்கல்லைன்னா என்ன செய்யறது?
‘வேறு பார்ப்போம்.’
கடைசியாக ஆள் உயரத்துக்கு பழக்குலை!
அவளது உயரத்தில் ஒரு பழக்குலைக்காக பல கடைகள் ஏறி இறங்கினது தான் மிச்சம். கிடைக்கல்ல. கடைசியில் எனது இளய மகன் ஒரு யோசனை கூறினான்.
வாப்பா! உம்மா உயரத்துக்கு இரண்டு மூணு குலைகள் வாங்கிக் கொடுத்தால் என்ன?
வெரிகுட்! நல்ல யோசனை!
அவ்லியா ஏத்துக்கிடமாட்டாங்களே! இது நீண்ட நாள் வேண்டுதலல்லவா? என்று என் மனைவி முணுமுணுத்தாள். ‘ ஒரே குலையா கிடைக்காதா ? என்றாள். ‘ கிடைக்கலியே!’ என்ன செய்வது ?
சரி அடுத்தகடைக்குப் போவோம். என்றாள். குலை தேடுவதிலே ஒரு மணி நேரம் ஓடிவிட்டது. வேறு வழியே இல்லாம அவளுடைய விருப்பமும் இல்லாம மூன்று பழக்குலைகள் வாங்கினோம்.
மூன்று பழக்குலைகளையும் நீளமாக சேர்த்து வைத்தேன். ஒரு கயிற்றுத் துண்டால் எனது இளைய மகன் அளவெடுத்தான். முக்கால் அடி அவளைவிட குலைகளுக்கு உயரம் ஜாஸ்தி. நான் மனைவியின் முகத்தைப் பார்த்தேன்.அவள் முகத்தில் கவலை கடந்தைக் கூடு போல தொங்கி நின்றது. அவளுக்கு அது விருப்பமே இல்லை. வேறு வழியில்லாம எங்க கூட வந்தாள். ‘உயரம் கூடினா பரவாயில்லை. குறையக்கூடாது’ என்று அவளை சமாதானம் கூறிக் கொண்டே நடந்தோம்.
சாப்பாடு சட்டிகளும், பையும்,மூன்று பழக்குலைகளையும் நாலு பேரும் சேர்ந்து தூக்கி அல்லாஹ் பிச்சை அவ்லியாவின் முன் வந்தோம்.
ஊது பத்தி வாசம்!
நெருப்பில் சாம்பிராணி கசியும் வாடை!
பூக்களின் வாசம்!
அவ்லியா சன்னிதானத்தில் கொடூரங்கள்!
சங்கலியால் கட்டிப்போட்டு அணுஅணுவாகச் செத்துக்கொண்டிருக்கும் பைத்தியங்களின் ஓலம் ஒருபக்கம்! வியாவை நாத்தம் மறுபக்கம்!
தரையில் உருண்டும்,புரண்டும், துள்ளியும், அலறியும் இறந்து கொண்டிருக்கும் பேய் பிடித்த அப்பாவிப் பெண்களின் அவலங்களும், அவர்களின் வாயிலிருந்து புறப்படும் தூவாடையும்,கெட்ட பேச்சுகளும்!
இவைகளுக்கு மத்தியில் வட்ட தாடியின் நடுவே கள்ளக் கண்களிலிருந்து புறப்படும் பார்வையும், உதட்டிலிருந்து அரைகுறையாகப் புறப்படும் யாசீன் சொற்களும்! எங்களைப் பார்த்ததும் ஒரு கும்பல் ஓடிவந்தது.
அவ்லியாவின் அனாமத்து வாரிசுகள்
என்ன ? என்று அவர்களைப் பார்த்து பயந்தவனாகக் கேட்டேன்.
நாங்களெல்லாம் தர்ஹா லெப்பைகள்.சிவப்பு குல்லாவும், நீள தலைப்பாகையும், கையிலே தஸ்பீஹ் வைத்து உருட்டுவதையும் பார்த்தாலே தெரியுது. இவர்களெல்லாம் பணம் பிடுங்கும் படா ஆசாமிகள்! அவ்லியாவின் அனாமத்து வாரிசுகள்! என்று.
ஒவ்வொருவரும் எங்கள் கையிலிருந்த பழக்குலைகளைப் பிடித்துப்பறித்தார்கள். ஜுப்பா சட்டை மாட்டிக் கொண்ட ஒருவர் தஸ்பீஹ் மணியை உருட்டிக்கொண்டு என் பக்கம் ஓடிவந்தார்.
என்ன நேர்ச்சைக் கடன் ? என்று என்னைக் கேட்டார். நான் யாரிடத்திலும் கடன் வாங்கலே ஹஸ்ரத்! கடன் காரர்கள் இவங்க தான்! என் மனைவியையும் மகனையும் சுட்டிக் காண்பித்தேன்.
‘எனக்கு காலிலுள்ள வெடிப்பு மாறணும்’ என் மனைவி.
அரையாண்டு பரீட்சைக்கு நான் பாஸாகணும். என் மகன்.
சேகுனா அல்லாஹ் பிச்சை அவலியாவுடைய துஆ பரக்கத்தினாலே அம்மா, உங்க காலில் உள்ள வெடிப்பு நீங்கும். தம்பி, நீ அரையாண்டு பரீட்சையிலே கண்டிப்பா ஜெயிக்கவும் செய்வாய். உடனே என் மனைவி லெப்பையிடம் ‘ யாஸீன் ஓதுங்கோ! ‘ என்று கேட்டுக் கொண்டாள்.
யாஸீனின் விலைவாசி ஏற்றங்கள்.
ஓதுவோம்! முதல்லெ ‘வெடிப்புக்குள்ள யாஸீனுக்கு பதினொண்ணு ரூபாய், அரையாண்டு பரீட்சையிலே ஜெயிக்க யாஸீனுக்கு ஒன்பது ரூபாய்,. மொத்தம் இருபது ரூபாய் பீஸ்’ கொடுத்துடுங்க. ஓதிவிடுவோம்.
அதைக் கேட்டதும், ‘ எங்க ஊர்லே யாஸீன் ஓத ஒரு ரூபாய் தானே பீஸ்!’ என்றேன்.
‘இங்கே இப்ப நாள் கூடக் கூட ஆள் வரத்து கூடிக்கொண்டே போகுது. தர்ஹா கட்டிடம் கட்டணும். தங்க அறைகள் கட்டணும். இப்படி ரெம்ப ரெம்ப செலவு இருக்குதுங்க! அதனாலே போன மாதத்திலிருந்து ஃபக்கீர் முஹம்மது இப்னு சுல்தானிடமிருந்து கூட்ட உத்தரவு வந்துள்ளது.
வேறு வழியின்றி இருபது ரூபாய்க்கு ஒரு சிவப்பு தாளை எடுத்து நீட்டும் போது என்னுடைய கை நடுங்கியது.
எதுக்கு கை நடுங்குது தெரியுமா? இது என்னுடைய வியர்வையின் காகித உருவம். அவர் உள்ளே சென்றார்.அவருக்குப் பின்னாலே என் மனைவியும் என் பிள்ளைகளும் சென்றனர். எனக்கு இதுலெ எல்லாம் நம்பிக்கை இல்லை. சாப்பிட ஏதாவது வாங்கி வரலாம்னு எதிர்த்த கடைக்குப் போனேன்.அங்கே வரிசையாகத் தொங்கிக் கொண்டிருந்த யானைகளின் போட்டோக்களின் மீது என் பார்வை சென்றது.
எங்கும் யானைகள்! அதிசயமோ அதிசயம்
இந்த ஊர் மக்களுக்கு யானை மீது ரொம்ப பாசம் போல தெரியுதே! எங்கு பார்த்தாலும் யானையின் போட்டோக்கள்!
அத்தா! உங்களுக்கு போட்டா வேணுமா? கடைக்காரன் கேட்டான்.
‘எந்த போட்டோ?’
‘ இந்த பள்ளி வாசலிலே அடங்கியிருக்காங்களே அந்த அவ்லியாவுடைய போட்டேர்.
எதுக்கும் ஒரு போட்டோ தாங்களேன் என்றேன்.
வீட்டுக்குள்ளே ஏறக்கூடிய தலை வாசலில் மாட்டணும். பேய் பிசாசு எதுவும் வராது. செல்வம் செழிக்குமத்தா’ என்று அவ்லியாவின் புராணம் பாடிக் கொண்டே ஒரு கூட்டிற்குள் திணித்து ஒரு போட்டோ தந்தார்.
ஃபிரேம் போட்டு மாட்டுங்க. தினமும் சாம்பிராணி புகை காட்டி பத்தி கொளுத்தி வையுங்கத்தா!
விலை ?
13.95. ரூபாய். போட்டோ விலையா? ஆம் என்றார். 15 ரூபாய் கொடுத்தேன்.1.05 ரூபாய் திருப்பித்தந்தார். கூட்டிலிருந்து போட்டோவை வெளியே எடுத்தேன். ஒரு யானையின் உருவப்படம். அவர் படம் மாறித் தந்து விட்டாரோ?
‘அத்தா! உங்க கிட்டே அல்லாஹ் பிச்சை அவ்லியா போட்டோ தான் கேட்டேன். நீங்க இந்த யானையோட போட்டோவை கொடுத்திருக்கீங்களே’
‘நான் மாற்றித்தரவில்லை’ அல்லாஹ் பிச்சை அவ்லியா என்பது இந்த யானையே தான். இந்த அவ்லியாவின் கபுறு தான் இது. என்றார்.
ஸுப்ஹானல்லாஹ்! மிருகங்களும், வனவிலங்குகளும் அவ்லியாக்களாக மாறிட்டாங்களா?
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. தலை சுற்ற ஆரம்பித்தது. இது வரை அவ்லியாவை மனுஷன்னுல்லே நினைச்சிட்டிருந்தேன். அவ்லியா யானையா மாறிட்டாங்களா? இதை என் மனைவி பிள்ளைங்க தெரிஞ்சா என்ன நினைப்பாங்களோ? எனத் தலையில் அடித்துக் கொண்டு இந்த யானை தர்ஹா எப்படிங்க வந்திச்சு? ஆத்திரத்தோடு கேட்டேன்.
உங்களுக்கு இது தெரியாதா அத்தா ?
தெரியாதே ?
திருவிதாங்கூர் மகாராஜா இந்த யானையை பெரிய பள்ளி வாசலுக்கு அன்பளிப்புச் செய்தார்.யானை இங்கு வரும்போது ஆறு வயசு இருக்கும். பெரிய பள்ளிவாசலுக்கு வந்ததும. அல்லா பிச்சை எண்ணு பேர் வெச்சாங்க.இங்கெ வந்து 68 வருஷமாச்சு.போன வருஷம் ஒரு கோயில் கொடைக்கு இரவு யானை போச்சுது. வாறெ வழியிலெ நோய் பிடிச்சுது. எப்படியோ இங்கு வந்து சேர்ந்திட்டுது. இரவு ஒண்ணுமே சாப்பிடலை. இரண்டு மணிக்கு மௌத்தா போச்சுது. பல ஊர்களிலிருந்தும் முஸ்லிமகளும் முஸ்லிமல்லாதவர்களும் படைபடையா வந்து குவிஞ்சிட்டாங்க. பெரிய பள்ளிவாசல் யானையில்லே! அத்தனை பேரும் சோகமும் கண்ணீருமா நின்று கொண்டிருந்தாங்க. ஒரு முஸ்லிமை அடக்கம் செய்வது போல அடக்கம் செய்தாங்க.
அடக்கம் செய்த இரவு கேட்டீங்களா அத்தா! யானை அதுடைய பாகன் பக்கீருடைய கனவுல வந்து சொல்லிச்சு.
பக்கிரி! நீஅழாதேப்பா,நான் மௌத்தாவல்லெ.இந்த குழிக்குள்ளே மறைவாக இருக்கிறேன். என்னை தேடிவருபவர்களின் நேமிசத்தை நிறைவேற்றிக் கொடுப்பேன்.என்னை கூப்பிடுப வர்களுக்கு பதில் சொல்வேன். நீ என்னை விட்டு எங்கும் போகவேண்டாம்.’
தினமும் ஆண்களும் பெண்களுமாக இப்ப எல்லா ஜாதியிலிருந்தும் மக்கள் குவிந்த வண்ணமாக இருக்காங்க. பல கறாமத்துகளும் நடக்குது.
அவர் சொல்லி முடிக்குமுன் எனக்கு ஒரு தடவை ஒரு நாளிதழில் இங்குள்ள பெரிய பள்ளிவாசல் யானை இறந்த செய்தி வாசித்தது நினைவுக்கு வந்தது.யானையைத்தூக்கிப் புதைக்க ஆளில்லாம மூன்று தினங்கள் கிடந்ததும் துர் வாடையால் யாரும் பக்கத்தில் செல்லாததும் பிறகு ஒரு டிராக்டரில் கெட்டி இழுத்துப் புதைத்ததும் நினைவுக்கு வந்தது.
‘இந்த அறிவிலிகளான மக்களை என்ன சொல்வது? இவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்வதைவிட மாண்டுவிடுவது எவ்வளவு மேலானது’
என் கையிலிருந்த யானை அவ்லியாவின் போட்டோவை கிழித்து வீசினேன்.கடைக்காரன் என்னை சுட்டு எரிக்கும் படியா பார்த்தான்.அவனுடைய பார்வையின் நெருப்பு தட்டாமல் விலகிக் கொண்டேன்.
பாவம்! எனது மனைவியும் எனது எனது பிள்ளைகளும் அறிவார்களா? இந்தக் கப்ருக் குழியில் ஒரு வருடத்திற்கு முன் அடக்கம் செய்த யானையின் இற்றுக் கொண்டிருக்கும் எலும்புத்துண்டுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றனவென்று! உடனே ஓடிச்சென்று உள்ளே பக்தியாக யாஸீன் ஓதிக்கொண்டிருந்த மனைவி பிள்ளைகளை இழுத்து வந்து, அழுகிப்போன யானையின் கதையைக் கூறி படித்த நாம், முட்டாள்களின் சொல்லைக் கேட்டு எவ்வளவு பெரிய மோசம் போயிம்டோம. பார்த்தீங்களா?
இந்த அவ்லியாக்களின் கதைகளெல்லாம் அண்டப்புளுகுகள்! வயிற்றுப் பிழைப்பிற்காக மக்களை முட்டாள்களாக்கி இஸ்லாத்திற்கே விரோதமான செயல்களைச் செய்து வயறு வளர்த்து வருகிறார்கள்.
”யானை, குதிரை,கழுதைகளுக்கெல்லாம் தர்ஹாக்களை எழுப்பி
இஸ்லாத்தையே மாசுபடுத்துகிறார்களே! இனிமேல் இந்த தர்ஹாக்கள் பக்கமே தலை வைத்துப் படுக்கக்கூடாது என என் ஆத்திரத்தையெல்லாம் வழிநெடுகக் கொட்டித் தீர்த்தேன்” என்று தன் யானைக் கதையைந் கூறி முடித்தார்.
அல்லாஹ், ‘ என்னிடமே கேளுங்கள். நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன். நீங்கள் கேட்பதையெல்லாம் நான் தருகிறேன்’ எனக்கூறியதை மறந்து விட்டு நாம் அழுகிப்போன யானைகளுக்குப் பின்னாலும், செத்துப்போன கழுதைகளுக்குப் பின்னாலும் போய் ஐந்தறிவு படைத்த மிருகங்களிடம் சென்று பகுத்தறிவுள்ள நாம் நம் தேவைகளைக் கேட்பது எவ்வளவு பெரிய அறிவீனம்! எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!?
சமுதாயமே சிந்தித்துப்பார். ஒவ்வொரு அவ்லியாக்களின் பின்னாலும் இப்படித்தான் அழுகிப்போன கதைகள் மறைந்துள்ளன என்பதை எண்ணிப்பார்த்து நம் சமுதாயம் திருந்த வேண்டாமா? அறிவுக்கேற்ற மார்க்கம் என உலகே வியந்து போற்றும் போது அதனை நாம் நிரூபிக்கவேண்டாமா? பகுத்தறிவு பேசும் இஸ்லாத்தின் தன்மானத்தை காக்கவேண்டாமா?
அழுகிப்போன யானைகளுக்கும் கருகிப்போன கழுதைகளுக்கும் பின்னால் போகலாமா?
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நன்றி:dhargavalikedu.tk:

No comments:

Post a Comment